Monday, February 7, 2011

ஓட்டுக்களை அல்ல... மனிதர்களைச் சேர்ப்பதுதான் முக்கியம்! - கமல்

சென்னை: ஓட்டுக்களைச் சேர்ப்பதை விட மனிதர்களைச் சேர்ப்பதுதான் இன்றைக்கு முக்கியம், என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

மேலும் பெட்ரோலைச் சேமிக்கவும், பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்தவும் பிப்ரவரி 14-ம் தேதி பெட்ரோல் போடாமல் இருப்போம், என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் புதிதாக இளைஞர் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதற்கான விழாவும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் சென்னை ஆழ்வார்பேட்டை மகாராஷ்டிரா நிவாஸ் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த விழாவுக்கு எல்லா மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர்.

சிறிய மண்டபம் என்பதால் குறைவான ரசிகர்களே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெளியே ரசிகர்கள் நீண்ட கியூ வரிசையில் காத்து நின்றனர். திருமண மண்டபத்தின் அருகே உள்ள தனது வீட்டில் இருந்து கமல்ஹாசன் காலை 10.30 மணியளவில் அங்கு வந்து இளைஞர் அமைப்பை தொடங்கி வைத்தார்.

உடல் ஊனமுற்றவர்களுக்கு 3 சக்கர சைக்கிள்களையும், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும், ஒரு சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்கான நிதியையும் வழங்கினார். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், "ரசிகர் மன்றம் இருக்கும்போது புதிதாக இளைஞர் அமைப்பு என்ற அமைப்பை என்ன காரணத்திற்காக தொடங்க வேண்டும் என்று கேட்கலாம்.

என்னைப் பொறுத்தவரையில், மனிதர்களை சேகரிப்பதுதான் முக்கியம். ஓட்டுக்களை சேகரிப்பது முக்கியம் அல்ல. நமது மன்றத்தின் பணிகள், செயல்கள் என்ன என்று செயல்விளக்க கூட்டங்களில் ஏற்கனவே பேசி இருக்கிறேன்.

எனவே, அதைப்பற்றி எல்லாம் இங்கு சொல்ல தேவையில்லை. ரசிகர்களை சந்திப்பதற்கான ஒரு தருணமாக இந்த நிகழ்ச்சியை கருதுகிறேன். இங்கே மண்டபத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் திரண்டு நிற்பதை பார்த்தேன். சாலையில் யாரும் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கக்கூடாது. மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமல் இருப்பதுதான் முதல் பணி.

பெட்ரோல் விலை உயர்வை எதிர்க்க....

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.18- க்கு விற்கப்படுகிறது. நம் நாட்டில் பெட்ரோல் விலை 64 ரூபாய் ஆகும். பெட்ரோல் விலையை குறைக்க அரசியல் கட்சிகள் என்ன முயற்சி எடுக்கின்றன என்பதை விட நாம் என்ன செய்ய போகிறோம் என்பதுதான் முக்கியம். இதை 'சோசியல் மெசேஜ்' என்று சொல்வார்கள்.

அரசியல் அமைப்புகளை விட தனி மனிதர்களுக்கு அதிக பலம் இருக்கிறது. நாம் எல்லோரும் ஒருநாள் பெட்ரோலே போடாவிட்டால் பிரச்சினை ஓரளவுக்கு சரியாகிவிடுமே. இதற்கான நாள் பிப்ரவரி 14-ந்தேதி என்று சொல்லி இருக்கிறார்கள். அதைக் கடைப்பிடித்துதான் பார்ப்போமே... அதற்காக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு நான் எதிரி கிடையாது. நாம் இதுபோன்ற பணிகளைச் செய்தால் போதும்.

அதற்கு மேல் போகத்தேவையில்லை. நாம் எந்த கட்சியை சார்ந்தவர்களும் கிடையாது. நம்மால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். மற்றவர்களை குறை சொல்லக்கூடியவர்கள் அல்ல நாம். எதையும் பகுத்தறிந்து, பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நாட்டுக்கு பயன்படக்கூடிய வகையில் நடந்துகொள்ள வேண்டும்..." என்றார்.

இந்த புதிய இளைஞர் அமைப்பில் ஏராளமான கல்லூரி மாணவ- மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். விழா முடிவடைந்த பிறகு கமலுடன் ரசிகர்கள் ஒவ்வொருவராக போட்டோ எடுத்துக்கொண்டனர்.

எப்படித்தான் வருதோ இந்த நியூஸெல்லாம்!-த்ரிஷா அலுப்பு

எப்படித்தான் இந்த செய்தியெல்லாம் வருதோ... நாளும் ஒரு விதமான செய்தி என்னைப் பற்றி வருகிறது என்று கூறியுள்ளார் த்ரிஷா.

சில தினங்களாக இணையதளங்களில் த்ரிஷா பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

த்ரிஷாவுக்கு திருமணம் என்று அவருக்கு நெருக்கமான சிலரே வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். அவரது தாயார் உமா கிருஷ்ணன் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் மும்முரமாக உள்ளாராம்.

இன்னொரு பக்கம் எப்படியாவது ரஜினியின் ஜோடியாக ராணாவில் நடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளாராம் த்ரிஷா.

இந்த நிலையில் அவரது மார்பில் உள்ள (நீண்ட காலமாக) டாட்டூவுக்கு புதிய விளக்கம் கற்பித்து இணையங்களில் செய்திகள் வரத்துவங்கியுள்ளன. தொடர்ந்து தன்னைப் பற்றி வரும் செய்திகள் குறித்து இப்படிக் கூறியுள்ளார் த்ரிஷா:

"அது ஏன் என்னைப் பத்தி மட்டும் இவ்ளோ செய்திகள் வருதுன்னே தெரியல. கல்யாண மேட்டர்ல நிறைய கற்பனை செய்திதான் வருது. நானே சொல்றேன். எதுக்கு அவசரம். மத்த செய்திகள் எதுவும் இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது" என்றார்.

Saturday, February 5, 2011

ஜெ- எஸ்.ஏ.சந்திரசேகரன் மீண்டும் சந்திப்பு... அதிமுகவுக்கு விஜய் பிரச்சாரம்?

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

அரசியலில் குதிப்பது குறித்தும நடிகர் விஜய்யும் அவர் தந்தையும் மாறி மாறி அறிக்கைகள், பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.

இப்போதைக்கு அரசியல் இல்லை என்று விஜய் கூறினாலும், 'அரசியல் ரீதியான நெருக்கடிகள் தனக்கு தொடர்வதால் வேறு வழியில்லை, நான் அரசியலில் இறங்கியாக வேண்டியுள்ளது' என்று விஜய் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

அவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனோ, அதிமுகவுக்கு ஆதரவாக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்யும் திட்டமுள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை இரண்டாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசினார். போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பும் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அதிமுகவில் விஜய் இணைந்து விடுவார் என்றும், தன்னுடைய மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டது.

இதன்பிறகு விஜய் தன் மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து கருத்துகளையும் கேட்டறிந்தார். வருகிற சட்டப் பேரவைத் தேர்தலை அரசியல் இயக்கமாக நாம் சந்தித்தே ஆக வேண்டும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தாகக் கூறப்பட்டது. இருப்பினும் தன் அரசியல் பிரவேசம் குறித்து அமைதிகாத்து வந்தார் விஜய்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான 'காவலன்' திரைப்படம், சில பிரச்னைகளால் ஒரு நாள் தாமதமாக திரைக்கு வந்தது. படத்தைத் திரையிட திரையரங்குகள் கிடைக்காத நிலையில், ஒரு வார இடைவெளிக்குப் பின்னரே முக்கிய திரையரங்குகளில் 'காவலன்' திரையிடப்பட்டது.

பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சில திரையரங்குகளின் வாசலில் வைக்கப்பட்ட பேனர்களும் கிழித்தெறியப்பட்டன. இதுதொடர்பாக பல மாவட்டங்களில் காவல்துறையிடம் ரசிகர்கள் புகார் அளித்தனர்.



தனக்கு இந்த நெருக்கடிகளைக் கொடுத்து வருவது ஆளும் திமுகவினரே என்று இப்போது பகிரங்கமாக பேசி வருகிறார் விஜய். இதனால், இந்தத் தேர்தலில் அவரும் அதிமுகவுக்கு ஆதரவாகக் களமிறங்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராணாவில் த்ரிஷாவும் நடிக்கிறார்?

கல்யாணம் பண்ணி செட்டிலாகும் முன் எப்படியாவது ரஜினியுடன் நடித்துவிட வேண்டும் என்ற த்ரிஷாவின் கனவு பலித்துவிடும் போலுள்ளது!

சூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தில் அவருக்கு ஒரு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன், ராணாவில் நடிப்பதற்காக, அக்ஷய் குமாரின் ஒரு படத்தைக் கூட உதறிவிட்டார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்னொரு ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்றார்கள். ஆனால் அவரோ கமல் - செல்வராகவன் இணையும் படத்துக்கு மொத்த கால்ஷீட்டையும் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.




இப்போது ரஜினியின் அந்த 'இன்னொரு ஜோடியாக' த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்போது தமிழில் மங்காத்தா படத்தில் மட்டும் நடித்துவரும் த்ரிஷா, சற்று இடைவெளிக்குப் பிறகு ஒப்புக் கொண்டுள்ள புதிய படம் இது.

இந்தப் படத்தில் த்ரிஷா நடிக்கக் கூடும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது. இதனால், 'த்ரிஷா நடிக்கக் கூடாது' என எஸ்எம்எஸ்ஸெல்லாம் அனுப்பி வந்தனர் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயின் தேடும் கவுதம் மேனன்!

நடுநிசி நாய்கள் படத்துக்குப் பிறகு, சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை இயக்குகிறார் கவுதம் மேனன்.

இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு சில தினங்கள் ஷூட்டிங் நடந்து பின் நிறுத்தப்பட்டது.

இப்படத்திற்கு முதல் அசின் - சூர்யா ஜோடியாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் இருவரும் பின்னர் விலகிக் கொள்ள, திரிஷா, நிகிதா, அபர்ணா ஆகிய மூன்று கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இடையில் வேறு படங்களில் கவுதம் மேனன் பிஸியாகிவிட்டார்.

இதற்கிடையே. த்ரிஷாவிற்கு பதிலாக அசினை அந்த பாத்திரத்தில் நடிக்க வைக்க கௌதம் முயன்றார். ஆனால் அசின் மறுத்துவிட்டார். மீண்டும் திரிஷாவையே நடிக்கக் கேட்டாராம். இந்த முறை த்ரிஷாவும் பதில் சொல்லாமல் இழுத்தடிக்கவே, வெறுத்துப் போன கவுதம் வேறு நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளார்.

புதிய நாயகி கிடைக்கும் வரை சும்மா இருப்பானேன் என்று, சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தின் ஷூட்டிங்கை புதுமுகங்களை வைத்து தொடர முடிவு செய்துள்ளாராம்.

மணிரத்னம் இயக்கத்தில் இணையும் விஜய்-விக்ரம்-விஷால்!

இரண்டு மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் வரவு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது தமிழில். அதற்கு சிகரம் வைப்பது போல ஒரு படம் உருவாகிறது மணிரத்னம் இயக்கத்தில்.

ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் விஜய் - விக்ரம் - விஷால் (வி3!) இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என்று ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுவதாகக் கூறப்பட்டது.

பொதுவாக தனது படங்களின் தலைப்பு முதல் டெக்னீஷியன்கள் விவரம் வரை எதையும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காப்பது மணிரத்னம் பாணி. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது!

இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது. ரூ 200 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.

தமிழில் இப்போது உருவாகிவரும் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே இரண்டு அல்லது மூன்று நாயகர்கள் நடிப்பதுதான். பாலாவின் அவன் இவன், அஜீத்தின் மங்காத்தா, விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிக்கும் நண்பன் என பெரிய லிஸ்டே உள்ளது!

விஜய் - விக்ரம் - விஷால் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை.

Wednesday, February 2, 2011

ரஜினிக்காக அக்ஷய் குமார் படத்துக்கு நோ சொன்ன தீபிகா!

ரஜினியின் அடுத்த படமான ராணாவில் நடிப்பதற்கு கால்ஷீட் தர வசதியாக, தான் அடுத்து அக்ஷய் குமாருடன் நடிப்பதாக இருந்த படத்தைக் கூட மறுத்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

தென்னக சூப்பர் ஸ்டாராக இருந்து, இப்போது இந்திய சூப்பர் ஸ்டாராகவும், உலக அளவில் அறியப்பட்ட இந்திய நாயகனாகவும் மாறியுள்ள ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே இன்றைய இளம் நடிகைகளின் ஆசையாக உள்ளது.


பிரபல பாலிவுட் நாயகி தீபிகா படுகோனும் இதற்கு விலக்கல்ல. கடந்த இரு ஆண்டுகளாகவே அவர் ரஜினி பட வாய்ப்புக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் ரஜினியின் புதிய படமான ராணாவில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து அவரிடம் கால்ஷீட் இல்லை. ரஜினி படத்தை தவற விடவும் மனமில்லை.

கடைசியில் அக்ஷய் குமாருடன் தான் நடிக்கவிருந்த ஒரு படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு, ரஜினி படத்துக்கு கால்ஷீட் தரத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் தீபிகா!

இப்படத்தில் ரஜினியின் இன்னொரு நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது.

எந்திரன் இரண்டாம் பாகம்... ஷங்கர் சூசகம்!

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றியையும் வசூலையும் குவித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ரோபோ 2 எனும் பெயரில் உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

எந்திரனை உருவாக்கிய அதே டீம் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்வதாகவும், சன் பிக்சர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் தனது இணையதளத்தில் ரசிகர் கேள்விக்கு பதிலளிக்கையில், "ரோபோவின் இரண்டாம் பாகம் குறித்து நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பார்க்கலாம்" என்று பதிலளித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தரப்பில் இதுகுறித்துக் கேட்டபோது, ரஜினி - ஷங்கர் எப்போது சொன்னாலும் நாங்கள் தயாரிக்க தயாராகவே உள்ளோம் என்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க தான் தயாராக இருப்பதாக ரஜினி ஏற்கெனவே கூறியுள்ளது நினைவிருக்கலாம்.

இப்போது நண்பன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஷங்கர். வழக்கமாக அதிக நாட்கள் படப்பிடிப்பை நடத்தும் ஷங்கர், இந்தப் படத்தை குறுகிய காலத்தில் உருவாக்கித் தரவிருக்கிறார். நண்பன் முடிந்ததும் 'ரோபோ 2' வேலைகளைத் தொடங்குவார் என்கிறார்கள்!

ஷங்கர் - விஜய் இணையும் 3 இடியட்ஸின் பெயர் நண்பன்!

விஜய் நடிக்கும் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு, ‘நண்பன்’ என்று தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

இதனை படத்தின் செய்தித் தொடர்பாளர் நிகில் அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை வெளியிட்டுள்ளார்.

படத்துக்கு இசை: ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்ஸா. பாடல்கள்: நா முத்துக்குமார், தயாரிப்பு வடிவமைப்பு: விமல்ஜி. வசனம்: ஷங்கர் மற்றும் மதன் கார்க்கி. திரைக்கதை-இயக்கம்: ஷங்கர்.

ஹீரோ விஜய், ஹீரோயின் இலியானா. மற்ற நடிகர்கள்: ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் மற்றும் பலர்.

இயக்குநர் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார். சிவா மனசுல சக்தி நாயகி அனுயாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

இந்த தலைப்பு ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாண்டியன் படத்துக்காக வைக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்!