Monday, February 7, 2011

ஓட்டுக்களை அல்ல... மனிதர்களைச் சேர்ப்பதுதான் முக்கியம்! - கமல்

சென்னை: ஓட்டுக்களைச் சேர்ப்பதை விட மனிதர்களைச் சேர்ப்பதுதான் இன்றைக்கு முக்கியம், என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

மேலும் பெட்ரோலைச் சேமிக்கவும், பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்தவும் பிப்ரவரி 14-ம் தேதி பெட்ரோல் போடாமல் இருப்போம், என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் புதிதாக இளைஞர் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதற்கான விழாவும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் சென்னை ஆழ்வார்பேட்டை மகாராஷ்டிரா நிவாஸ் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த விழாவுக்கு எல்லா மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர்.

சிறிய மண்டபம் என்பதால் குறைவான ரசிகர்களே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெளியே ரசிகர்கள் நீண்ட கியூ வரிசையில் காத்து நின்றனர். திருமண மண்டபத்தின் அருகே உள்ள தனது வீட்டில் இருந்து கமல்ஹாசன் காலை 10.30 மணியளவில் அங்கு வந்து இளைஞர் அமைப்பை தொடங்கி வைத்தார்.

உடல் ஊனமுற்றவர்களுக்கு 3 சக்கர சைக்கிள்களையும், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும், ஒரு சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்கான நிதியையும் வழங்கினார். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், "ரசிகர் மன்றம் இருக்கும்போது புதிதாக இளைஞர் அமைப்பு என்ற அமைப்பை என்ன காரணத்திற்காக தொடங்க வேண்டும் என்று கேட்கலாம்.

என்னைப் பொறுத்தவரையில், மனிதர்களை சேகரிப்பதுதான் முக்கியம். ஓட்டுக்களை சேகரிப்பது முக்கியம் அல்ல. நமது மன்றத்தின் பணிகள், செயல்கள் என்ன என்று செயல்விளக்க கூட்டங்களில் ஏற்கனவே பேசி இருக்கிறேன்.

எனவே, அதைப்பற்றி எல்லாம் இங்கு சொல்ல தேவையில்லை. ரசிகர்களை சந்திப்பதற்கான ஒரு தருணமாக இந்த நிகழ்ச்சியை கருதுகிறேன். இங்கே மண்டபத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் திரண்டு நிற்பதை பார்த்தேன். சாலையில் யாரும் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கக்கூடாது. மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமல் இருப்பதுதான் முதல் பணி.

பெட்ரோல் விலை உயர்வை எதிர்க்க....

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.18- க்கு விற்கப்படுகிறது. நம் நாட்டில் பெட்ரோல் விலை 64 ரூபாய் ஆகும். பெட்ரோல் விலையை குறைக்க அரசியல் கட்சிகள் என்ன முயற்சி எடுக்கின்றன என்பதை விட நாம் என்ன செய்ய போகிறோம் என்பதுதான் முக்கியம். இதை 'சோசியல் மெசேஜ்' என்று சொல்வார்கள்.

அரசியல் அமைப்புகளை விட தனி மனிதர்களுக்கு அதிக பலம் இருக்கிறது. நாம் எல்லோரும் ஒருநாள் பெட்ரோலே போடாவிட்டால் பிரச்சினை ஓரளவுக்கு சரியாகிவிடுமே. இதற்கான நாள் பிப்ரவரி 14-ந்தேதி என்று சொல்லி இருக்கிறார்கள். அதைக் கடைப்பிடித்துதான் பார்ப்போமே... அதற்காக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு நான் எதிரி கிடையாது. நாம் இதுபோன்ற பணிகளைச் செய்தால் போதும்.

அதற்கு மேல் போகத்தேவையில்லை. நாம் எந்த கட்சியை சார்ந்தவர்களும் கிடையாது. நம்மால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். மற்றவர்களை குறை சொல்லக்கூடியவர்கள் அல்ல நாம். எதையும் பகுத்தறிந்து, பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நாட்டுக்கு பயன்படக்கூடிய வகையில் நடந்துகொள்ள வேண்டும்..." என்றார்.

இந்த புதிய இளைஞர் அமைப்பில் ஏராளமான கல்லூரி மாணவ- மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். விழா முடிவடைந்த பிறகு கமலுடன் ரசிகர்கள் ஒவ்வொருவராக போட்டோ எடுத்துக்கொண்டனர்.

எப்படித்தான் வருதோ இந்த நியூஸெல்லாம்!-த்ரிஷா அலுப்பு

எப்படித்தான் இந்த செய்தியெல்லாம் வருதோ... நாளும் ஒரு விதமான செய்தி என்னைப் பற்றி வருகிறது என்று கூறியுள்ளார் த்ரிஷா.

சில தினங்களாக இணையதளங்களில் த்ரிஷா பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

த்ரிஷாவுக்கு திருமணம் என்று அவருக்கு நெருக்கமான சிலரே வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். அவரது தாயார் உமா கிருஷ்ணன் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் மும்முரமாக உள்ளாராம்.

இன்னொரு பக்கம் எப்படியாவது ரஜினியின் ஜோடியாக ராணாவில் நடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளாராம் த்ரிஷா.

இந்த நிலையில் அவரது மார்பில் உள்ள (நீண்ட காலமாக) டாட்டூவுக்கு புதிய விளக்கம் கற்பித்து இணையங்களில் செய்திகள் வரத்துவங்கியுள்ளன. தொடர்ந்து தன்னைப் பற்றி வரும் செய்திகள் குறித்து இப்படிக் கூறியுள்ளார் த்ரிஷா:

"அது ஏன் என்னைப் பத்தி மட்டும் இவ்ளோ செய்திகள் வருதுன்னே தெரியல. கல்யாண மேட்டர்ல நிறைய கற்பனை செய்திதான் வருது. நானே சொல்றேன். எதுக்கு அவசரம். மத்த செய்திகள் எதுவும் இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது" என்றார்.

Saturday, February 5, 2011

ஜெ- எஸ்.ஏ.சந்திரசேகரன் மீண்டும் சந்திப்பு... அதிமுகவுக்கு விஜய் பிரச்சாரம்?

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

அரசியலில் குதிப்பது குறித்தும நடிகர் விஜய்யும் அவர் தந்தையும் மாறி மாறி அறிக்கைகள், பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.

இப்போதைக்கு அரசியல் இல்லை என்று விஜய் கூறினாலும், 'அரசியல் ரீதியான நெருக்கடிகள் தனக்கு தொடர்வதால் வேறு வழியில்லை, நான் அரசியலில் இறங்கியாக வேண்டியுள்ளது' என்று விஜய் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

அவர் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனோ, அதிமுகவுக்கு ஆதரவாக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்யும் திட்டமுள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை இரண்டாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசினார். போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பும் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அதிமுகவில் விஜய் இணைந்து விடுவார் என்றும், தன்னுடைய மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டது.

இதன்பிறகு விஜய் தன் மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து கருத்துகளையும் கேட்டறிந்தார். வருகிற சட்டப் பேரவைத் தேர்தலை அரசியல் இயக்கமாக நாம் சந்தித்தே ஆக வேண்டும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தாகக் கூறப்பட்டது. இருப்பினும் தன் அரசியல் பிரவேசம் குறித்து அமைதிகாத்து வந்தார் விஜய்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான 'காவலன்' திரைப்படம், சில பிரச்னைகளால் ஒரு நாள் தாமதமாக திரைக்கு வந்தது. படத்தைத் திரையிட திரையரங்குகள் கிடைக்காத நிலையில், ஒரு வார இடைவெளிக்குப் பின்னரே முக்கிய திரையரங்குகளில் 'காவலன்' திரையிடப்பட்டது.

பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சில திரையரங்குகளின் வாசலில் வைக்கப்பட்ட பேனர்களும் கிழித்தெறியப்பட்டன. இதுதொடர்பாக பல மாவட்டங்களில் காவல்துறையிடம் ரசிகர்கள் புகார் அளித்தனர்.



தனக்கு இந்த நெருக்கடிகளைக் கொடுத்து வருவது ஆளும் திமுகவினரே என்று இப்போது பகிரங்கமாக பேசி வருகிறார் விஜய். இதனால், இந்தத் தேர்தலில் அவரும் அதிமுகவுக்கு ஆதரவாகக் களமிறங்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராணாவில் த்ரிஷாவும் நடிக்கிறார்?

கல்யாணம் பண்ணி செட்டிலாகும் முன் எப்படியாவது ரஜினியுடன் நடித்துவிட வேண்டும் என்ற த்ரிஷாவின் கனவு பலித்துவிடும் போலுள்ளது!

சூப்பர் ஸ்டார் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தில் அவருக்கு ஒரு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன், ராணாவில் நடிப்பதற்காக, அக்ஷய் குமாரின் ஒரு படத்தைக் கூட உதறிவிட்டார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்னொரு ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்றார்கள். ஆனால் அவரோ கமல் - செல்வராகவன் இணையும் படத்துக்கு மொத்த கால்ஷீட்டையும் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.




இப்போது ரஜினியின் அந்த 'இன்னொரு ஜோடியாக' த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்போது தமிழில் மங்காத்தா படத்தில் மட்டும் நடித்துவரும் த்ரிஷா, சற்று இடைவெளிக்குப் பிறகு ஒப்புக் கொண்டுள்ள புதிய படம் இது.

இந்தப் படத்தில் த்ரிஷா நடிக்கக் கூடும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது. இதனால், 'த்ரிஷா நடிக்கக் கூடாது' என எஸ்எம்எஸ்ஸெல்லாம் அனுப்பி வந்தனர் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயின் தேடும் கவுதம் மேனன்!

நடுநிசி நாய்கள் படத்துக்குப் பிறகு, சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை இயக்குகிறார் கவுதம் மேனன்.

இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு சில தினங்கள் ஷூட்டிங் நடந்து பின் நிறுத்தப்பட்டது.

இப்படத்திற்கு முதல் அசின் - சூர்யா ஜோடியாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் இருவரும் பின்னர் விலகிக் கொள்ள, திரிஷா, நிகிதா, அபர்ணா ஆகிய மூன்று கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இடையில் வேறு படங்களில் கவுதம் மேனன் பிஸியாகிவிட்டார்.

இதற்கிடையே. த்ரிஷாவிற்கு பதிலாக அசினை அந்த பாத்திரத்தில் நடிக்க வைக்க கௌதம் முயன்றார். ஆனால் அசின் மறுத்துவிட்டார். மீண்டும் திரிஷாவையே நடிக்கக் கேட்டாராம். இந்த முறை த்ரிஷாவும் பதில் சொல்லாமல் இழுத்தடிக்கவே, வெறுத்துப் போன கவுதம் வேறு நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளார்.

புதிய நாயகி கிடைக்கும் வரை சும்மா இருப்பானேன் என்று, சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தின் ஷூட்டிங்கை புதுமுகங்களை வைத்து தொடர முடிவு செய்துள்ளாராம்.

மணிரத்னம் இயக்கத்தில் இணையும் விஜய்-விக்ரம்-விஷால்!

இரண்டு மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் வரவு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது தமிழில். அதற்கு சிகரம் வைப்பது போல ஒரு படம் உருவாகிறது மணிரத்னம் இயக்கத்தில்.

ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் விஜய் - விக்ரம் - விஷால் (வி3!) இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என்று ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுவதாகக் கூறப்பட்டது.

பொதுவாக தனது படங்களின் தலைப்பு முதல் டெக்னீஷியன்கள் விவரம் வரை எதையும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காப்பது மணிரத்னம் பாணி. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது!

இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது. ரூ 200 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.

தமிழில் இப்போது உருவாகிவரும் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே இரண்டு அல்லது மூன்று நாயகர்கள் நடிப்பதுதான். பாலாவின் அவன் இவன், அஜீத்தின் மங்காத்தா, விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிக்கும் நண்பன் என பெரிய லிஸ்டே உள்ளது!

விஜய் - விக்ரம் - விஷால் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை.

Wednesday, February 2, 2011

ரஜினிக்காக அக்ஷய் குமார் படத்துக்கு நோ சொன்ன தீபிகா!

ரஜினியின் அடுத்த படமான ராணாவில் நடிப்பதற்கு கால்ஷீட் தர வசதியாக, தான் அடுத்து அக்ஷய் குமாருடன் நடிப்பதாக இருந்த படத்தைக் கூட மறுத்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

தென்னக சூப்பர் ஸ்டாராக இருந்து, இப்போது இந்திய சூப்பர் ஸ்டாராகவும், உலக அளவில் அறியப்பட்ட இந்திய நாயகனாகவும் மாறியுள்ள ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே இன்றைய இளம் நடிகைகளின் ஆசையாக உள்ளது.


பிரபல பாலிவுட் நாயகி தீபிகா படுகோனும் இதற்கு விலக்கல்ல. கடந்த இரு ஆண்டுகளாகவே அவர் ரஜினி பட வாய்ப்புக்காக காத்திருந்தார்.

இந்த நிலையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் ரஜினியின் புதிய படமான ராணாவில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. ஆனால் அந்த நேரம் பார்த்து அவரிடம் கால்ஷீட் இல்லை. ரஜினி படத்தை தவற விடவும் மனமில்லை.

கடைசியில் அக்ஷய் குமாருடன் தான் நடிக்கவிருந்த ஒரு படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு, ரஜினி படத்துக்கு கால்ஷீட் தரத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் தீபிகா!

இப்படத்தில் ரஜினியின் இன்னொரு நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது.

எந்திரன் இரண்டாம் பாகம்... ஷங்கர் சூசகம்!

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றியையும் வசூலையும் குவித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ரோபோ 2 எனும் பெயரில் உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

எந்திரனை உருவாக்கிய அதே டீம் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்வதாகவும், சன் பிக்சர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் தனது இணையதளத்தில் ரசிகர் கேள்விக்கு பதிலளிக்கையில், "ரோபோவின் இரண்டாம் பாகம் குறித்து நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பார்க்கலாம்" என்று பதிலளித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தரப்பில் இதுகுறித்துக் கேட்டபோது, ரஜினி - ஷங்கர் எப்போது சொன்னாலும் நாங்கள் தயாரிக்க தயாராகவே உள்ளோம் என்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க தான் தயாராக இருப்பதாக ரஜினி ஏற்கெனவே கூறியுள்ளது நினைவிருக்கலாம்.

இப்போது நண்பன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஷங்கர். வழக்கமாக அதிக நாட்கள் படப்பிடிப்பை நடத்தும் ஷங்கர், இந்தப் படத்தை குறுகிய காலத்தில் உருவாக்கித் தரவிருக்கிறார். நண்பன் முடிந்ததும் 'ரோபோ 2' வேலைகளைத் தொடங்குவார் என்கிறார்கள்!

ஷங்கர் - விஜய் இணையும் 3 இடியட்ஸின் பெயர் நண்பன்!

விஜய் நடிக்கும் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு, ‘நண்பன்’ என்று தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

இதனை படத்தின் செய்தித் தொடர்பாளர் நிகில் அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை வெளியிட்டுள்ளார்.

படத்துக்கு இசை: ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்ஸா. பாடல்கள்: நா முத்துக்குமார், தயாரிப்பு வடிவமைப்பு: விமல்ஜி. வசனம்: ஷங்கர் மற்றும் மதன் கார்க்கி. திரைக்கதை-இயக்கம்: ஷங்கர்.

ஹீரோ விஜய், ஹீரோயின் இலியானா. மற்ற நடிகர்கள்: ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் மற்றும் பலர்.

இயக்குநர் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார். சிவா மனசுல சக்தி நாயகி அனுயாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

இந்த தலைப்பு ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாண்டியன் படத்துக்காக வைக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்!

Monday, January 31, 2011

3 இடியட்ஸிலிருந்து சூர்யா நீக்கப்பட்டது ஏன்?

3 இடியட்ஸ் படத்தை விட, அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஹீரோக்களை ஒப்பந்தம் செய்தது சுவாரஸ்யமான கதை.

இந்தப் படத்தை தமிழில் எடுக்கும் உரிமையை ஜெமினி நிறுவனம் வாங்கியபோதே, அதன் ஹீரோ விஜய்தான் என்று முடிவு செய்திருந்தனர். 6 மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து விஜய் பேட்டியும் அளித்திருந்தார். விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. சிம்புவும் நடிக்க சம்மதித்திருந்தார்.

ஆனால் இடையில் ஏகப்பட்ட மாறுதல்கள். எந்திரன் ரிலீஸானதும், ஷங்கரிடம் இந்த புராஜெக்டை கொண்டுபோனார்கள் ஜெமினி நிறுவனத்தினர் (எந்திரன் வெளியீட்டாளர்களும் ஜெமினிதான்!). அவரும் இயக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்திலிருந்து விஜய் நீக்கப்பட வேண்டும் என 'முக்கியமான இடத்திலிருந்து' தயாரிப்பாளருக்கு பிரஷர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதைப் பெரிதாக்காமல் அமுக்கிவிட்ட மீடியா, ஷங்கருக்கும் விஜய்க்கும் பிரச்சினை என்றும், விஜய் கெட்டப் மாற ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கிளப்பிவிட்டன. இத்தனைக்கும் வேலாயுதம் படம் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போதே, 3 இடியட்ஸுக்காக கெட்டப் மாற்றிக் கொண்டிருந்தார் விஜய் என்பதை ஒருவரும் சொல்லவில்லை!

ஒரு கெட்ட தினத்தில், விஜய் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஜெமினி. ஆனால் ஷங்கர் வழக்கம்போல மவுனம் சாதித்தார்.

அதன் பிறகு இந்தப் படம் குறித்து யோசிக்கும் நிலையில் விஜய் இல்லை. காவலன் அவரை அந்தப் பாடு படுத்தியது. அதை வெளியிட்டு முடித்து, பாக்ஸ் ஆபீஸில் படம் சூப்பர் ஹிட் என ரிசல்ட் வரும் வரை விஜய்யால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

இதற்கு நடுவில் 3 இடியட்ஸில் நடந்த சமாச்சாரங்கள் ஒரு மெகா சீரியலுக்கு சமமானது.

விஜய் நடிக்கவில்லை, அவருக்குப் பதில் சூர்யா நடிக்கிறார் என்று ஜெமினி நிறுவனம் அறிவித்ததிலிருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது.

பெரும் வாய்ப்பு, பெரிய இயக்குநர், பெரிய நிறுவனம் எல்லாமே தன்னை மிக எளிதாகத் தேடி வந்ததால், சூர்யா தன் பங்குக்கு பெரிதாக பிகு பண்ண ஆரம்பித்தார் என்கிறார்கள்.

இயக்குநர் ஷங்கருக்கு எக்கச்சக்க கண்டிஷன்களைப் போட்டார். தெலுங்கிலும் நான்தான் ஹீரோவாக நடிப்பேன் என்பது அவரது முதல் கண்டிஷன். மகேஷ்பாபு அங்கே விலகிக் கொண்டதால், இருக்கட்டும் பரவாயில்லை என்று தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார். ஷங்கர் மவுனம் காத்தார்.

அடுத்து, இந்தப் படத்துக்கு சம்பளமாக தமிழில் ரூ 12 கோடியும், தெலுங்கு விநியோக உரிமையில் 50 சதவீதமும் கேட்டாராம் சூர்யா (கிட்டத்தட்ட ரூ 10 கோடி இதன் மதிப்பு). அல்லது ஏதாவது ஒரு பதிப்பின் வெளியீட்டு உரிமையை தனது உறவினரின் நிறுவனத்துக்கு தரவேண்டும் என்றாராம். ஆடிப் போனார்கள் தயாரிப்பாளர்கள்!

அடுத்து அவர் வைத்த ஒரு மெகா கண்டிஷன்... மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதாவது உதயநிதியின் 'ஏழாம் அறிவு', கேவி ஆனந்தின் 'மாற்றான்' படங்களை முடித்துவிட்டு வரும் வரை ஷங்கர் காத்திருக்க வேண்டுமாம்!

ஷூட்டிங்கும் முன்பே கண்ணைக் கட்டுதே என்று புலம்ப ஆரம்பித்தது தயாரிப்பாளர் தரப்பு.

ஆனால் ஷங்கர் மிகத் தெளிவாக இருந்தார். 'மெயின் ஹீரோ யார் என்பதில் ஒரு முடிவுக்கு வாருங்கள், அதுவரை சும்மா இருக்க முடியாது' என்று கூறிவிட்டு இரண்டாவது ஹீரோ ஜீவா, மூன்றாவது ஹீரோ ஸ்ரீகாந்த் மற்றும் சத்யராஜூடன் ஊட்டிக்குப் போய் ஷூட்டிங்கையே தொடங்கிவிட்டார் கடந்த ஜனவரி 25-ம் தேதி.

சூர்யா வேண்டாம் என்று முடிவு செய்த ஜெமினி, மீண்டும் விஜய்யுடம் பேச முடியுமா என இயக்குநர் ஷங்கரைக் கேட்க, அதற்காகவே காத்திருந்த மாதிரி சட்டென்று விஜய்யைத் தொடர்பு கொண்டாராம் ஷங்கர்.

காவலன் வெற்றி என்ற திருப்தியிலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு அரசியல் இல்லை என்பதில் தெளிவாகவும் இருந்த விஜய், எடுத்த எடுப்பிலேயே எந்த நிபந்தனையுமில்லாமல் சம்மதம் சொல்லியிருக்கிறார்.

வேலாயுதம் படத்தின் சில காட்சிகள் எடுத்து முடிந்ததும் படப்பிடிப்புக்கு ஆஜராகிவிடுவதாகக் கூறிவிட்டார். அதன்படி பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

ஒருவழியாக 3 இடியட்ஸ் குழப்பத்துக்கு ஒரு நல்ல க்ளைமாக்ஸ் கிடைத்துவிட்டதாக கமெண்ட் அடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

படத்துக்கு இப்போதைய பெயர் மூவர். விரைவில் இந்தப் பெயர் மாறக்கூடும்!

எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்துக்கு மொத்த செலவு ரூ 132 கோடி என்றும், இந்தப் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் ரூ 179 கோடி என்றும், சேட்டிலைட் உரிமை மூலம் ரூ 15 கோடி கிடைத்திருப்பதாகவும் சன் நெட்வொர்க் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு அறிக்கையை மும்பை பங்கு வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது சன் நெட்வொர்க் நிறுவனம். அதன்படி டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டுக்கான சன் டிவியின் நிகர லாபம் 48 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சன் லாபம் ரூ 151.94 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ரூ 225.49 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 50.47 சதவீதம் உயர்ந்துள்ளது.

மூன்றாம் காலாண்டின் சன் நெட்வொர்க்கின் துணை நிறுவனம் சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினி நடித்த எந்திரன் படம் மூலம் 179 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக செய்யப்பட்ட மொத்த செலவு ரூ 132 கோடி என்று சன் டிவி கூறியுள்ளது.

எந்திரன் செலவு ரூ 182 கோடி என்றும், வருவாய் ரூ 400 கோடி என்றும் இதுவரை வந்த பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவித்தன. வெளிநாடுகளில் மட்டும் ரூ 70 கோடி வசூலித்ததாக படத்தை வெளியிட்ட ஈராஸ் - அய்ங்கரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

காதலர் தினத்திற்கு 2 படம்

காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி மாதத்தில் 2 திரைப்படங்கள் காதலர்களை மகிழ்விக்க வருகிறது.

தீபாவளி, பொங்கலுக்கு புதிய திரைப்படங்கள் வருவதைப் போல இப்போது காதலர் தினத்தன்றும் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று, விண்ணைத் தாண்டி வருவாயா வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல 2009ம் ஆண்டு சிவா மனசுக்குள் சக்தி படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த வரிசையில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகின. ஒன்று ஆனந்த்தின் கோ. இன்னொன்று, பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள எங்கேயும் காதல்.

இரு படங்களுக்கும் இசையமைப்பு ஹாரிஸ் ஜெயராஜ். இரு படங்களின் பாடல்களும் ஏற்கனவே அனைவரையும் வசீகரிக்க ஆரம்பித்து விட்டன. எங்கேயும் காதல் படத்தின் மூலம் ஹன்சிகா மோத்வானி தமிழுக்கு அறிமுகமாகிறார். ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

காதலர் தினத்தன்று வெளியாகும் இந்த இரு படங்களில் யார் காதலர்களுடைய பெருவாரியான ஆதரவுகளைப் பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, January 27, 2011

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் விசிறிகள் பக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.

ஹேக் செய்தவர்கள் அதில் ஒரு செய்தியையும் விட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்தியைப் படித்து விட்டு 1, 800 பேர் விருப்பமும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பக்கம் நீக்கப்பட்டு விட்டதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது



பேஸ்புக்கில் புகுந்து ஹேக் செய்வது சகஜமாகி வருகிறது. ஏராளமான பிரபலங்களின் பக்கங்கள்தான் இந்த பிரச்சினைக்கு ஆளாகின்றன. சமீபத்தில் கூட பிரான்ஸ் அதிபர் சார்கோசியின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தனர். அதில் சார்கோசி மறு தேர்தலை விரும்பவில்லை என்று எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்து, பேஸ் புக்குக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர் குசும்புக்கார ஹேக்கர்கள்.

சிம்புதேவனுடன் இணையும் தனுஷ்!

சன் டிவியின் மெகா விளம்பரங்கள் கூட தனுஷின் ஆடுகளத்தைக் காப்பாற்ற முடியவில்லை. நகரப் பகுதிகளில் வசூல் சுமார்... கிராமம் சார்ந்த திரையரங்குகள் பலவற்றில் படத்தை தூக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் தனது அடுத்த வெளியீடாக ரஜினி பட ரீமேக்கான 'மாப்பிள்ளையைக் களமிறக்கத் தயாராகிறார் தனுஷ். இதுவும் சன் பிக்சர்ஸ் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்குப் பிறகு ஹரியின் வேங்கை, சுப்பிரமணியன் சிவாவின் சீடன், செல்வராகவனின் இரண்டாம் உலகம் என வரிசையாக உள்ளன தனுஷ் படங்கள்.

இதற்கிடையே, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் தந்த சிம்பு தேவனுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் தனுஷ். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போல இந்தப் படமும் பேண்டஸி கதைதானாம். இந்தப் படத்தைத் தயாரிக்க இரு பெரிய நிறுவனங்கள் முன்வந்துள்ளனவாம்.

இன்னொரு பக்கம், வெற்றி மாறன் 2012-ல் தயாரிக்கும் படத்திலும் தனுஷ் நடிக்கிறாராம்.

காவலன் 'சூப்பர் ஹிட்'!

பொங்கலுக்கு வந்த படங்களில் ஏகப்பட்ட சர்ச்சைகள் மற்றும் தடைகளைத் தாண்டி சூப்பர் ஹிட் என்று அறிவிக்கப்பட்டுள்ளது விஜய் நடித்த காவலன்.

பொங்கலுக்கு காவலன் படம் வருமா? வராதா? என பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஒரு பக்கம் தியேட்டர்காரர்கள் பிரச்சினை செய்ய, மறுபக்கம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பின்வாங்க தட்டுத் தடுமாறி ரிலீஸ் செய்தனர் படத்தை.

ஆனால் இன்று படத்துக்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்களே, படம் குறித்து பாஸிடிவாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை முடிந்து இரண்டு வாரங்களாகும் நிலையில் படங்களின் வசூல் நிலவரம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி விஜய்யின் காவலன்தான் இன்றைய தேதிக்கு முதலிடத்தில் உள்ளது. சென்னை போன்ற நகர்ப்புற திரையரங்குகளில் இப்போதும் ஓரளவுக்காவது ஆன்லைன் புக்கிங் இருப்பது காவலனுக்கு மட்டுமே. மற்ற படங்களைப் பொறுத்தவரை, காட்சி நேரத்தின் போதுதான் டிக்கெட் வாங்கவே வருகிறார்கள்.

குறிப்பாக வார இறுதி நாட்களில் காவலன் படம் கிட்டத்தட்ட ஹவுஸ்புல் என்ற நிலை. கிராமத்துப் பகுதிகளில் ரிலீசான பொங்கல் படங்களில் சிறுத்தையும், இளைஞனுக்கும் பெட்டிக்குத் திரும்ப ஆரம்பித்துவிட்டன. ஆனால் காவலன் ஸ்டெடியாக உள்ளதாகவும், ஆடுகளம் இன்னும் சில தினங்கள் தாக்குப் பிடிக்கக் கூடும் என்றும் கோவை விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்

Wednesday, January 26, 2011

தெலுங்கில் ரீமேக்காகும் காவலன்-பெல்லம்கொண்டா சுரேஷிடம் உரிமை

தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான பெல்லம்கொண்டா சுரேஷ் விஜய், அசின் நடித்துள்ள காவலன் படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளார்.

காவலன் திலீப், நயன்தாரா நடித்த பாடிகார்ட் என்னும் மலையாளப் படத்தின் ரீமேக் ஆகும். பாடிகார்ட் மற்றும் காவலன் படங்களை இயக்கியவர் சித்திக்.

காவலன் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கமாக இல்லாத விஜய் படமாக இருப்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு. குறிப்பாக ரிப்பீட் ஆடியன்ஸ் வருகையால் படம் வெற்றிப் படமாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது காவலன் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதற்கான உரிமையை சுரேஷ் வாங்கியுள்ளார்.

படங்களை ரீமேக் செய்வதில் கில்லாடியான சுரேஷ் இன்னும் ஹீரோ, ஹீரோயினைத் தேர்வு செய்யவில்லை. இந்தப் படத்தையும் சித்திக் தான் இயக்குவாரா என்றும் தெரியவில்லை.

இதற்கிடையே, காவலன் வெற்றியைத் தொடர்ந்து பாடிகார்ட் படம் விரைவில் சல்மான் கானை வைத்து இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தையும் சித்திக் தான் இயக்குவார் என்றும் தெரிகிறது. அனேகமாக ஆசினே நாயகியாகவும் நடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் விருது-2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் பரிந்துரை

ஆஸ்கர் விருது ஜூரம் தீவிரமாகியுள்ளது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர், 2 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் 2 ஆஸ்கர் விருதுகளை அவர் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளி சாதனை படைத்தார் ரஹ்மான். அவர் மட்டுமல்லாமல், குல்ஸார், ரசூல் பூக்குட்டி ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்தன.

இந்த நிலையில், ரஹ்மான் இசையமைப்பில், டேனி பாயில் இயக்கியுள்ள 127 ஹவர்ஸ் திரைப்படம் பல்வேறு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ரஹ்மானின் பெயர் மட்டும் 2 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த ஒரிஜினல் பாடல் (இஃப் ஐ ரைஸ்) ஆகிய இரு பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரையாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளுவாரா ரஹ்மான் என்ற எதிர்பார்ப்பு பெரிதாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில், அதிகபட்சமாக தி கிங்க்ஸ் ஸ்பீச் படம் மொத்தம் 12 பிரிவுகளில் பரிந்துரையைப் பெற்றுள்ளது. ட்ரூ கிப்ட் படம் 10 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

83வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.

140 தமிழ்ப் படங்களுக்கு மானியம்: ராம.நாராயணன் அறிவிப்பு

சென்னை: 2007-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஆண்டுக்கு 35 படங்கள் வீதம் மொத்தம் 140 படங்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளுக்கான மானிய தொகை வழங்கி, தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தமிழக முதல்வர் [^] கருணாநிதி [^] க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் திரையுலகினரின் துன்பங்களை துடைத்து, இன்பம் சேர்க்கும் விதமாக, கடந்த 2007, 2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு தமிழக அரசின் மானிய தொகைக்கான விண்ணப்பம் அளிக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கான விண்ணப்பத்தை சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் ராம.நாராயணன் கூறியிருக்கிறார்.

பாபர் மசூதி கதை... கைவிட்டார் கமல் [^] !

சர்ச்சைகளை படமாக்குவது கமலுக்கு பிடித்தமான விஷயம். ஆனால் அதன் பின்விளைவுகளாகத் தொடரும் கலாட்டாக்களை நினைத்து இப்போது பின்வாங்க ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது.

அதிலும் தனது மன்மதன் அம்பு பாடலுக்கு கிடைத்த 'மரியாதை' அவரை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டது போலிருக்கிறது.

ஹேராம், விருமாண்டிக்குப் பிறகு தானே இயக்கப் போகும் தனது அடுத்த படத்தின் கதைக் களமாக கமல் தேர்வு செய்தது பாபர் மசூதி இடிப்பு சம்பவம் [^] மற்றும் அதன் பின் விளைவுகளைத்தான்.

ஆனால், சர்ச்சைகளைத் தவிர்க்க, இந்தக் கதையைப் படமாக்குவதைத் தவிர்த்தேன் என்று அவர் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கான கதை விவாதமெல்லாம் முடிந்த நிலையில், இப்படியொரு படம் [^] எடுத்தால் ஏற்படப் போகும் விவாதங்கள், விமர்சனங்கள் மற்றும் கலாட்டாக்களை நினைத்து கைவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கமல் கூறுகையில், "பாபர் மசூதி கதை பலத்த சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் அப்படம் எடுப்பதை கைவிட்டு விட்டேன். அதற்காக நான் பயந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை...", என்றார்.